பணமதிப்பிழப்பு நடவடிக்கை கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை பாதித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய வேளாண் துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கையில் பணமில்லாமல் பருவ மழை காலத்தில் வேளாண்மைக்குத் தேவையான விதைகளையும், உரங்களையும் வாங்க முடியாமல் அவதிபட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் பணப் பரிமாற்றத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விற்க முடியாமலும், தேவைப்படும் விதை, உரங்களை வாங்க முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.
பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கூட, பணி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில்,
"பணமதிப்பிழப்பு நடவடிக்கை கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை பாதித்துள்ளது. விதைகளையும், உரங்களையும் வாங்குவதற்கு கூட அவர்களிடம் போதிய பணம் இல்லாமல் போனது.
ஆனால், இன்றும் மோடி அவர்களது துரதிருஷ்டத்தை கேலி செய்கிறார். தற்போது, வேளாண் துறை அமைச்சகமே பணமதிப்பிழப்பு நடவடிக்கை விவசாயிகளின் முதுகெலும்பை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது" என்றார்.