உடல்நிலைக் காரணமாக 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட அறிவிப்புக்கு ஒருவர் நன்றி கூறியுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல மிசோரம் மாநில முன்னாள் ஆளுநரும், சுஷ்மா சுவராஜின் கணவருமான சுவராஜ் கௌஷல்தான்.
சுஷ்மா சுவராஜின் அறிவிப்பைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் சுவராஜ் கௌஷல் கூறியிருப்பதாவது, மேடம், தற்போதாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்ததற்கு கோடானு கோடி நன்றி. மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் கூட ஒரு நாள் தனது ஓட்டத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்தது.
இந்த மாரத்தான் போட்டி 1977ம் ஆண்டு தொடங்கியது. நீங்கள் தொடர்ந்து 11 முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டீர்கள். 1991 மற்றும் 2004ம் ஆண்டு கட்சி உங்களை போட்டியிட அனுமதிக்காத இரண்டு முறையைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளீர்கள். மக்களவையில் 4 முறையும், மாநிலங்களவையில் 3 முறையும் உறுப்பினராக இருந்துள்ளீர்கள்.
மேடம், உங்கள் பின்னால் கடந்த 46 ஆண்டுகளாக ஓடி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு 19 வயதாகிறது என்று எண்ண வேண்டாம், எனக்கும் வயதாகிவிட்டது, என்னாலும் ஓட முடியாது. நன்றி என்று தெரிவித்துள்ளார்.