ஹைதராபாத்: ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் என்று பிரதமர் மோடியை, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது கட்டமாக செவ்வாயன்று பிரசார கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.
முதல்கட்ட பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நிஜாமாபாத் நகரை லண்டன் நகருக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன் என்று உங்கள் முதல்வர் தெரிவித்திருந்தார், ஆனால், இந்த பகுதிக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் எனப் பேசியிருந்தார். இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் என்று பிரதமர் மோடியை, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
செவ்வாயன்று மெஹபூப் நகர் பகுதியில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
நாங்கள் ஆட்சி செய்யும் தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதுபோல் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் எந்தவொரு மாநிலத்திலாவது வழங்கப்பட்டுள்ளதா?
குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தெலங்கானா மாநில அரசு முதலிடத்தில் உள்ளது. இங்கு மின்சாரப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால் தெலங்கானாவில் மின்சாரம் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள் மோடி.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப்போல் நான் யாருக்கும் பயந்தவனல்ல. ஒரு முதல்வருக்கு எதிராக இப்படித் தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் சுமத்த முடியாது. இப்படிப்பட்ட பொய்யை நீங்கள் எப்படி சொல்லலாம்?
பொறுப்புள்ள பிரதமர் பதவியில் இருக்கும் நீங்கள் ஓட்டுக்காக இப்படி பொய் பேசாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.