பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மாணவர் ஒருவர் செருப்பை வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் வியாழன் அன்று காலை பாபு சப்கர் என்ற இடத்தில நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருர்ந்தார். அவர் மேடையில் அமர்ந்திருந்த பொழுது சாந்தன் குமார் திவாரி என்ற மாணவர் நிதிஷ் குமார் மீது செருப்பு ஒன்றை வீசினார். ஆனால் அந்த செருப்பானது அவர் மீது விழாமல் சில அடி தொலைவு தள்ளி விழுந்தது.
உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அவரை வளைத்து பிடித்தனர். ஆனால் அதற்குள் ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சாந்தன் குமார் திவாரி, தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்றும், பிகாரில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.