உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தேவசம் போர்டை வலியுறுத்தியுள்ளோம்: பந்தளம் அரச குடும்ப நிர்வாகத் தலைவர்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ள நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தேவசம் போர்டை வலியுறுத்தியுள்ளோம்: பந்தளம் அரச குடும்ப நிர்வாகத் தலைவர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ஆம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சபரிமலை விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

‘பூமாதா பிரிகேட்’அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சில பெண்களுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பந்தளம் அரச குடும்பம், சபரிமலை கோயில் பூசாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் பேச்சு நடத்த வருமாறு, ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், தந்திரி மகாமண்டலம் உள்ளிட்ட அமைப்புகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டன.

சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ள நிலையில் போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

இந்நிலையில், பந்தளம் அரச குடும்ப நிர்வாகத் தலைவர் பி.ஜி.சசிகுமார் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும். அதுவரை தற்போது உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் மேல் முறையீடு செய்வது குறித்து அக். 19-ந் தேதி ஆலோசனை நடத்துவதாக தேவசம் போர்டு தெரிவித்தது. 

இன்றே அதுகுறித்து ஆலோசிக்க அவர்கள் மறுத்துள்ளது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவசம் போர்டு தாயாராக இல்லை என்பதால் நாங்கள் வெளியேறிவிட்டோம் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com