சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பெண் பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால், மத்திய அரசு தலையிட்டு சட்டம்-ஒழங்கு நிலைநாட்ட வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கேரள அரசு முயன்று வருகிறது.
ஆனால், அதற்கு எதிராக, நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசைக் கண்டித்து பல்வேறு ஹிந்து அமைப்புகள், பாஜகவின் ஆதரவுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சபரிமலை விவகாரம், ஹிந்து பழமைவாதிகளுக்கும், ஹிந்து சீர்திருத்தவாதிகளுக்கும் இடையேயான போராட்டம். நான் சார்ந்திருக்கும் விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை நிலைநாட்ட வேண்டும்.
கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஊறிய சிந்தனையின் விளைவாகவே, சபரிமலை செல்லும் பெண்களுக்கு சில ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் எவ்வித எதிர்ப்புமின்றி சுதந்திரமாக வழிபடுவதை மாநில அரசால் உறுதிபடுத்த முடியவில்லையெனில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கேரளத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.