சபரிமலை சன்னிதானம் அருகே சென்ற இரண்டு பெண்களும் பலத்து பாதுகாப்புடன் பம்பை திரும்புகின்றனர்.
சபரிமலைக்கு இன்று காலை ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்கதர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இரண்டு பெண்களும் சபரிமலை நடைப்பந்தலில் இருந்து பலத்து பாதுகாப்புடன் பம்பை திரும்பிச் செல்கின்றனர்.
இதையடுத்து சன்னிதானம் பகுதியில் போராடிய அர்ச்சகர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளனர். மேலும் நடைப்பந்தலில் நடந்த பக்தர்களின் போராட்டமும் முடிவுக்கு வந்ததுள்ளது. இதனால் சபரிமலையில் நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.