புது தில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தனது விசாரணை நடவடிக்கைகளில் அலோக் வர்மா தலையிடுவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் அண்மையில் அஸ்தானா புகாரளித்திருந்தார். அதேசமயம் வழக்கு ஒன்றில் தொழிலதிபரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
நிலைமை மோசமாக ஆவதை உணர்ந்த மத்திய அரசு செவ்வாய் நள்ளிரவு எடுத்த முடிவின் படி அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக சிபிஐ இயக்குநராக ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையேயான பனிப்போரால் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை கோரிக்கைகள் அல்லது அறிக்கைகள் கேட்கப்படும் போது அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.