பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்திருப்பதால் சர்ச்சை அதிகரித்துள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதங்களாக முற்றிய நிலையில் உள்ள கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கோவா, மும்பை, தில்லி மற்றும் நியூயார்க் என தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கோவாவில் அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கணகாணிப்பில் ஓய்வில் இருக்கிறார்.
உடல்நலக்குறைபாடு இருந்த போதும் முதல்வர் பதவியில் இருந்து விலகாத அவரது போக்கு எதிர்கட்சிகளாலும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்ககளாலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே மறுத்திருப்பதால் சர்ச்சை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பாரிக்கர் உடல்நிலை தொடர்பாக நான் எதுவும் கூற இயலாது. முதல்வர் உடல்நலமின்றி இருக்கிறார். அதுதொடர்பாக தகவல் கூறுவது அவரது குடும்பத்தார் சார்ந்த விஷயம். சுகாதாரத்துறை அமைச்சருக்கானது அல்ல.
அதிசயங்கள் நடக்கும் என்று எப்போதும் நம்புங்கள். எந்த வித உடல்நலக்குறைபாட்டிலும் இருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது மருத்துவ அறிவியலை மீறிய ஒன்றுதான். எனவே நமபிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.