போபால்: விரைவில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிக அளவில் லைக்ஸ் மற்றும் பாலோயர்களை பெற்றிருக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இந்தத் தேர்தலில் விவசாயிகள் பிரச்சனை, பரபரப்பைக் கிளப்பிய வியாபம் ஊழல் மற்றும் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் செயல்பாடுகளில் தோல்வி ஆகிய விவகாரங்களை முன்வைத்து பிரசாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோல தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிக அளவில் லைக்ஸ் மற்றும் பாலோயர்களை பெற்றிருக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக்கில் 15,000 லைக்ஸ் மற்றும் ட்விட்டரில் 5000 பாலோயர்களை பெற்றிருக்க வேண்டும்.
வாட்ஸ்-அப் குழுக்களில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
மாநில காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு போஸ்ட்களுக்கு லைக் போட வேண்டும், ரீட்விட் செய்ய வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியானது மேலும் பல்வேறு தகுதிகளை வரையறை செய்துள்ளது
எனவே போட்டியிட விரும்புவோர் தங்களது வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தொடர்பான தகவல்களை கட்சியின் ஐடி பிரிவிடம் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.