மும்பை: இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர்களில் ஒருவர் உதய் சோப்ரா. இவர் பிரபல இயக்குநர் யஷ் சோப்ராவின் மகனாவார். இவர் 2000-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த 'மொஹபத்தீன்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாஸிபிள் உள்ளிட்ட பல்வேறு படங்களில்நடித்துள்ளார். கடைசியாக 2013- ஆம் ஆண்டு தூம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்தார்.
இந்நிலையில் இவர் இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக இது நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டால் நமக்கு நிறைய வருவாய் கிடைக்கும். அத்துடன் இதனுடன் சேர்ந்துள்ள குற்றச் செயல்பாடுகளையும் ஒழிக்க முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மிக முக்கியமாக அதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது.
நான் இதனை பயன்படுத்துவதில்லை. ஆனால் கஞ்சா செடியுடனான நமது வரலாற்றைப் பார்க்கையில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.