ரொக்கப் பணமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் கையிருப்புப் பணம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 67% குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் கையில் ரொக்கப் பணமாக ரூ.1,50,000 இருந்தது. ஆனால் இது 67 சதவீதம் குறைந்து இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி கையிருப்பு ரொக்கம் ரூ.48,944 ஆகக் குறைந்துள்ளது.
அதே சமயம், மோடியின் சொத்து மதிப்பு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.2.28 கோடியாகும். இதில் ரூ.1,28,50,498 அசையும் சொத்துக்களின் மதிப்பும் உள்ளடங்கும். காந்திநகரில் தற்போது இருக்கும் மோடியின் வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.
இதில்லாமல் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் மோடியின் கணக்கில் ரூ.11,29,690 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரில் எந்த காரும் இல்லை. சமீபத்தில் பிரதமர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரில் எந்த வாகனமும், விமானமும், கப்பலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி எந்த தங்க நகையும் வாங்கவில்லை. அவர் ஏற்கனவே வைத்திருந்த 4 தங்க மோதிரங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. அதில்லாமல், அவர் எந்த வங்கியிலும் கடன் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.