பெங்களூரு: கர்நாடக கூட்டணி அரசைக் காப்பதற்காக முதல்வர் குமாரசாமி தரம் தாழ்ந்து செயல்படுவதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் மதச்சசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் ஆட்சி தொடர்பாக சில வருத்தங்கள் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் கர்நாடக கூட்டணி அரசைக் காப்பதற்காக முதல்வர் குமாரசாமி தரம் தாழ்ந்து செயல்படுவதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் புதனன்று நடைபெற்ற மாநில பாஜகவின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
தனது தலைமையிலான கர்நாடக மாநில அரசைக் காப்பாற்ற வேண்டுமே என்று தவிக்கும் குமாரசாமி, அதிக பணம் தருவதாகவும், அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி பாஜக எம்.எல்.ஏக்களை கைப்பற்ற முயன்று வருகிறார். முதல்வரே இவ்வளவு தரம் தாழ்ந்து செயல்படுவது இந்த அரசு எவ்வளவு நிலையற்றதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அரசு நீண்ட நாளைக்கு நீடிக்காது.
சமீபத்தில் கலபுராகி சென்றிருந்த முதல்வர் குமாரசாமி, அலந்து தொகுதி பாஜக எம்.எல்.ஏவான் சுபாஷ் குட்டேட்டரிடம் வருகிறார் இவ்வாறு நடக்க முற்பட்டுளார். பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலையை உணர்கின்றனர். இது யாவரும் நிம்மதியாக அங்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆளும் கூட்டணிக்குள் நிலவும் இத்தகைய காரணங்களினால், இந்த ஆட்சி வெகுநாளைக்கு நீடிக்கும் என்று யாரும் நம்ப முடியாது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.