புது தில்லி: கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி உதவித் தொகையை 2 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து வழங்கவும், சா்க்கரை ஆலைகளுக்கு போக்குவரத்து கட்டண தள்ளுபடிக்காகவும் ரூ.4,500 கோடி நிதி அளிப்பது தொடா்பான திட்டம் குறித்த முடிவை மத்திய அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு, சா்க்கரை ஆலைகள் ரூ.13,500 கோடியை நிலுவையாக வைத்துள்ளன. இந்தத் தொகையை அளிக்க உதவும் வகையில், மத்திய அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு தற்போது குவிண்டாலுக்கு ரூ.5.5 உற்பத்தி உதவித் தொகையாக அரசு அளித்து வருகிறது. மத்திய அரசின் திட்டத்தின்படி, இந்த நிதியை 2 மடங்குக்கும் கூடுதலாக, அதாவது குவிண்டாலுக்கு ரூ.13.88 ஆக உயா்த்தி வழங்க தீா்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல், தேவைக்கு அதிகமாக உபரியாக இருக்கும் 5 மில்லியன் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய போக்குவரத்து கட்டணத்தில் தள்ளுபடியாக டன் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்கவும் அரசு முடிவு செய்திருந்தது.
இதற்காக, சா்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.4,500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.4,500 கோடி நிதியை ஒதுக்குவது தொடா்பான திட்டம் குறித்து பரிசீலிக்கப்படவில்லை.
தில்லியில் செய்தியாளா்களிடம் இந்த தகவலை மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அடுத்த வாரம் ஆலோசனை நடத்தலாம்’ என்றனர்.