வியன்னா: மாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணு சக்தி கழகத்தில் 62-வது பொது கருத்தரங்கில், இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர் பாசு கலந்துகொண்டு பேசினார். அப்போது, 2030-ஆம் ஆண்டிற்குள் 21 புதிய அணு உலைகளை அமைக்கும் திட்டம் குறித்து கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாகவும், தற்போது வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் மாறுபட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு புதிய அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்டு இந்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட 4 புதிய அணு உலைகளை சர்வதேச அணு சக்தி கழகத்தின் வழிகாட்டுதல்களின் படி வெற்றிகரமாக நிறுவியுள்ளதாகவும், மொத்தம் 26 அணு உலைகள் சர்வதேச அணு சக்தி கழகத்தின் வழிகாட்டுதல்களின் படி அமைக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி துறையில் வெளிநாடுகளுடான உறவை மேம்படுத்தும் நோக்கில் 6 அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் இடையே கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானதாக தெரிவித்தார்.
சர்வதேச அணு சக்தி கழகத்தின் சார்பில் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து 150க்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராட இரண்டு ரேடியன்யூக்ளிட் ஜெனரேட்டர்கள் பயன்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.