லக்னௌ: ஷிவ்பால் யாதவின் பிளவு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பியும், முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவின் நெருங்கிய உறவினருமான் தேஜ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. முலாயம்சிங்கின் இளைய சகோதரரும், கட்சியின் முன்னாள் தலைவருமான ஷிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து பிரிந்து சமாஜ்வாதி செக்யுலர் மோர்ச்சா என்னும் கட்சியைத் துவக்கினார். அத்துடன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஷிவ்பால் யாதவின் பிளவு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பியும், முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவின் நெருங்கிய உறவினருமான் தேஜ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மைன்புரி தொகுதி எம்.பியாக இருப்பவர் தேஜ் பிரதாப் சிங். முலாயம் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான இவர் முலாயம்சிங் யாதவின் கொள்ளு மருமகன் ஆவார்.
இவர் தற்போது ஷிவ்பால் யாதவின் பிளவு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக சமாஜ்வாதி கட்சியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாக முலாயம் குடும்பத்திலிருந்து ஒருவர் ஷிவ்பால் யாதவ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.