பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்முத் குரேஷியும் சந்திக்க உள்ளனர். இந்தத் தகவலை சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இரு அமைச்சர்களின் சந்திப்புக்கான தேதியும், நேரமும் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.