சௌபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் உறுதி: பிரதமர் மோடி
சௌபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் உறுதி என பிரதமர் மோடி சனிக்கிழமை சத்தீஸ்கரில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கர் சென்றுள்ள பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நிலையான அரசை தேர்ந்தெடுப்பதற்கு போதுமான முதிர்ச்சியுடன் சத்தீஸ்கர் மக்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது,
"சத்தீஸ்கர் மக்கள் மிகவும் புத்திசாலிகள். சரியான முடிவை தேர்ந்தெடுப்பதில் அவர்கள் தவறு செய்ததே கிடையாது. எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளுக்கு சத்தீஸ்கர் வாக்காளர்கள் ஏமாறமாட்டார்கள். அதனால் தான் அங்கு நிலையான அரசு உள்ளது.
முன்னதாக, ஒரு சிலருக்கு மட்டும் வீடு கிடைத்தது ஏன்? ஏழை மக்களுக்கு சொந்த வீடுகளை வைத்துக்கொள்ள உரிமை இல்லையா? அரசு அமைப்பை ஊழல் பாழாக்கிவிட்டது. அனைத்து வளர்ச்சிக்கும் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்.
அடல்ஜி, வளர்ச்சி எனும் தனது கனவுக்காக, உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் என 3 மாநிலங்களை உருவாக்கினார். அந்த 3 மாநிலங்களும் துரிதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் வளர்ச்சி வாஜ்பாயி-இன் கனவை வெளிப்படுத்துகிறது. இன்றைய சூழலில் இந்தியாவில் வளர்ந்து வரும் மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று.
வாக்கு வங்கிக்காகவோ, தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ நாங்கள் திட்டங்களை உருவாக்குவதில்லை. புதிய நவீன சத்தீஸ்கரை உருவாக்க விரும்புகிறோம். ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம் என்ற மந்திரத்துடன் முன்நோக்கி செல்கிறோம்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு இணைப்பு எண்ணிக்கையை நாங்கள் எங்களது 4 ஆண்டு ஆட்சியில் வழங்கியுள்ளோம். பணக்காரர்கள், ஏழைகள் என இரண்டு தரப்பினருக்கும் எரிவாயு இணைப்பை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏழை மற்றும் பணக்காரர்களின் இல்லத்தில் கழிப்பறைகள் கட்டித் தர முடிவு செய்துள்ளோம். கழிப்பறைகள் கட்டிக்கொடுப்பதை எங்களது திட்ட இலக்காக நிர்ணயித்துள்ளோம். உஜ்ஜாவாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பை உறுதி செய்துள்ளோம். தற்போது, சௌபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்று உறுதியளிக்கிறோம்.
தொழில்நுட்பங்களின் தலையீடு மூலம் விவசாயிகளின் நலன்களை உறுதிசெய்கிறோம். மண் வள அட்டைகள் மற்றும் ஃபசல் பீம யோஜனா நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு மகத்தான நன்மை அளிக்கிறது. அரசியல் ஸ்திரமின்மையால் சிறிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்ற பார்வையை சத்தீஸ்கர் மாநிலம் மாற்றியுள்ளது" என்றார்.