உலக நன்மைக்காக, இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று சீன துணைத் தூதர் மா ஸன்வு கூறினார்.
சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 49-ஆவது ஆண்டு தினம், கொல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், சீன துணைத் தூதர் மா ஸன்வு கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த ஜூலை மாதம் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை அவர்கள் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும். அதற்கு, இந்தியா, சீனா இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்க வேண்டும். இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்து, உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதற்கு பங்காற்ற வேண்டும்.
முன்னொரு காலத்தில் சீனா ஏழை நாடாக இருந்தது. அங்கு மக்கள் வறுமையில் வாடினர். ஆனால், தற்போது வளர்ச்சியடைந்த நாடாக அது மாறி வருகிறது. சீனாவின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்து வருவதால், அன்னியச் செலாவணி இருப்பில் முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.