பாகிஸ்தான் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் சனிக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் வியாழன் இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டன.
முன்னதாக புதனன்று ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தை அறுத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.
இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இந்திய அரசின் கொள்கை சுருக்கமாகவும், தெளிவாகவும் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
பந்திபோராவில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையிலான துப்பாக்கிச் சூடு நிறைவுற்றது. மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் ராணுவம் இணைந்து கூட்டாக நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் சுமக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கு நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே வீரியத்துடன் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. ஆனால், அதேமாதிரியான காட்டுமிராண்டித்தனமாக இருக்காது. இருப்பினும், அவர்களும் அந்த வலியை உணர வேண்டும்.
நவீன ஆயுதங்கள் எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படும். குறிப்பிட்ட ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைய நமது படையில் அதையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். அதனால், ஆயுதங்களை கொள்முதல் செய்வது தொடரும்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நான் பேசவிரும்பவில்லை. ஆனால், நவீன ஆயுதங்கள் அனைத்து படைகளின் தேவையாக உள்ளது.
அரசியல் விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. எங்களது ஆப்ரேஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நீங்கள் பார்க்கலாம்" என்றார்.