காங்கிரஸ் கட்சியினர் வறுமையை ஒழிப்பதாகவே காலம் காலமாக அரசியல் செய்துள்ளனர் என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.
உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார். இந்த துவக்க விழாவில் அவர் பேசுகையில்,
"இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்ற மந்திரம் முன்வைக்கப்பட்டு வருகிறது. வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் அரசியல் தான் செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து அரசியல் செய்யாமல் இருந்திருந்தால் இந்தியா தற்போது வேறு நிலையில் இருந்திருக்கும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு உதவும் வகையிலும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தான் உள்ளது. வறுமையில் இருந்து 5 கோடி மக்கள் மீண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் கிராமம் மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாலேயே அவர்கள் பதக்கம் வென்றனர்.
கடந்த காலங்களில் சாதி மற்றும் மத நம்பிக்கையின் பெயரில் வாக்கு வங்கி அரசியல் தான் நடத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து இந்தியர்களுக்குமானது" என்றார் அவர்.