ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் போன்ற முக்கிய விவகாரங்கள் எழும் போது பாகிஸ்தான் பிரச்னையை எழுப்பி பிரதமர் மோடி திசை திருப்புகிறார் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா,
"ஒவ்வொரு முறை மெஹூல் சோக்ஸி அல்லது நீரவ் மோடி போன்றவர்கள் இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடும்போது, மோடி அரசு பாகிஸ்தானை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு முறை வங்கி முறைகேட்டில் அரசு தவறிழைத்தால் மோடி அரசு பாகிஸ்தானை நினைவுபடுத்துகிறது. தற்போது ரஃபேல் ஊழல் வெளிவந்துள்ளது, மோடி அரசு மீண்டும் பாகிஸ்தானை பயன்படுத்துகிறது.
பிரதமருக்கு நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். தேசத்துக்காக தேசத்தின் சில கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளியுங்கள் பிரதமர் மோடி.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதற்கு பாகிஸ்தான் விரும்பும் போது, பகட்டான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதலா?
பதன்கோட் விமான தளம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது அழையா விருந்தாளியாக நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்றீர்கள். இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதல் இல்லையா?
பாகிஸ்தான் மண்ணில் இருந்து தினசரி இந்தியாவுக்கு வருகை தரும் பயங்கரவாதிகளின் பாதுகாவலரான அச்சமூட்டும் ஐஎஸ்ஐ-ஐ, பதன்கோட் விமான தள தாக்குதலை விசாரிக்க அழைப்பு விடுத்தீர்கள். அதே ஐஎஸ்ஐ தான் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்று சொந்த ராணுவ வீரர்களை இந்தியாவே கொன்றதாக குற்றம்சாட்டியது. இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்ட காதல் இல்லையா?
காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்த போது, பிரதமர் முன்னிலையிலேயே பிடிபி முதல்வர் ஜம்மூ காஷ்மீர் மக்களுக்கோ, இந்திய ராணுவத்துக்கோ அல்லது தேர்தல் ஆணையத்துக்கோ நன்றி தெரிவிக்கவில்லை. அவர் பாகிஸ்தானுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் தான் நன்றி தெரிவித்தார். இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதலா?
மத்தியப் பிரதேச பாஜக தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதலா?
காஷ்மீரில் உங்களுடைய துணை முதல்வர் நிர்மல் சிங் பொதுவெளியில் பயங்கரவாதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் கொன்றிருக்கக் கூடாது என்று கூறினார். இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதலா?
'பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம்' திட்டத்தின் போஸ்டருக்காக அசியா அந்த்ராபியை அழைக்க மோடி அரசு முன்வந்தது. இது பாகிஸ்தான் மீது நீங்கள் கொண்டுள்ள காதலா?
இதன்மூலம், பாஜகவுடனான பயங்கரவாதிகளின் தொடர்பு தெளிவாகியுள்ளது. தேசியவாதம் பற்றி எங்களுக்கு பாடம் புகட்ட வேண்டாம். இந்த நாட்டுக்காக எங்களுடைய சொந்த ரத்தத்தில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சர்தார் பியாந்த் சிங், நந்தகுமார் பட்டேல் மற்றும் பலரின் ரத்தத்தால் இந்த தேசத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
திசை திருப்பாமல் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்" என்றார்.