ஐ.நா.: சூழ்ச்சி செய்யும் மட்டக் குதிரையை எவ்வாறு சமாளிப்பது என்று இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும் என ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன், ஒரு சூழ்ச்சி செய்யும் மட்டக் குதிரை, இந்தியாவின் அங்கமான காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஆனால் இதுபோன்ற செயலை இந்தியா ஏற்கனவே பல முறை வெற்றிகரமாக சமாளித்துள்ளது, இம்முறையும் அதனை சமாளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மேற்கண்ட பதிலை அவர் அளித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் என்பது சர்வதேசக் கூட்டமாகும், இதில் சர்வதேச விவகாரங்கள்தான் பேசப்பட வேண்டுமே தவிர, தாங்கள் எந்த விஷயத்தில் மிக ஆர்வமாக செயல்படுகிறோமோ அதைப் பற்றி பேசக்கூடாது என்றும் பாகிஸ்தானை மறைமுகமாகக் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததும், இன்று துவங்கும் 73வது ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.