பிகார் மாநிலம், முசாபர்பூரில் முன்னாள் மேயர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முசாபர்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகுல் ரஞ்சன் கூறியதாவது: முசாபர்பூர் மாநகராட்சி மேயராக கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சமீர் குமார். முசாபர்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் அருகே காரில் சமீர் குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சமீர் குமாரும், அவரது கார் ஓட்டுநரும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் 18 முறை அவர்கள் மீது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவலின்பேரில், போலீஸார் விரைந்து வந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியை கைப்பற்றினர். தடயவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினர். சமீர் குமார் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக முசாபர்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.