வளர்ச்சியை குறித்து விவாதிப்பைவிட அரசு மீது சேற்றை வாரி வீசுவது எளிதான காரியம் என்பதால், காங்கிரஸ் அதில் ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் பங்கேற்று தொண்டர்கள் முன் உரையாற்றினர்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,
"125 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்சி சிறிய கட்சிகளிடம் எல்லாம் கூட்டணிக்கு கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு கிடைத்தாலும், அந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையாது. தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற பயத்தில் தான் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணியை அமைத்துள்ளது.
'சப்கா சாத் சப்கா விகாஸ்' (ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்) பிரச்சாரம் வெறும் மந்திரம் மட்டுமல்ல. அனைவருக்குமான சமூக நீதி மீது இந்த அரசு நம்பிக்கை வைத்துள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலும் பாஜக வெற்றி வாகை சூடும்.
சேற்றை வாரி வீசுவது எளிதான காரியம் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னதாகவும் சேற்றை வாரி வீசும் காரியத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதிகளவில் நீங்கள் சேற்றை வாரி வீச வீச, தாமரை அதிகளவில் மலரும் என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
இப்படி சேற்றை வாரி வீசுவதில் ஈடுபடுவதை தவிர்த்து, வளர்ச்சி போன்ற விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தமாட்டார்கள். அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. இன்றைய சூழலில் காங்கிரஸ் நாட்டின் சுமையாக மாறியுள்ளது. அவற்றில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு பாஜக தொண்டர்களுக்கு உள்ளது" என்றார்.