மயூர்பானி: ஒடிஸா மாநிலம் மயூர்பானி பகுதியில் ஏற்பட்ட கடுமையான மின் தடை காரணமாக, மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிட் ரகுநாத் முர்மு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர் தாகினா ரஞ்சன் டுடு கூறுகையில், ஒரு நாளைக்கு நான் 180 - 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன். இங்கு மிக மோசமான மின்பற்றாக்குறை நிலவுகிறது. எப்போதெல்லாம் நோயாளிகள் வருகிறார்களோ அப்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்துத்தான் ஆக வேண்டும், மின்சாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்க முடியாது என்கிறார்.
இந்த மருத்துவமனைக்கு போதிய மின்சார வசதி செய்து கொடுக்கப்படாததும், இப்பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் எந்த விஷயத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஒரு டிரான்ஸ்பார்மர் கூட இல்லாமல் இயங்கி வரும் இந்த மருத்துவமனை மிக மோசமான வசதிகளுடன் செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறுகிறார்கள்.
நோயாளி ஒருவருக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் விடியோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.