சீன எல்லையில் புதிய விமான நிலையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சீன எல்லை அருகே சிக்கிம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரின்பீல்ட் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சிக்கிம் மாநிலம், பாக்யோங்கில் கட்டப்பட்டுள்ள புதிய கிரின்பீல்ட் விமான நிலையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
சிக்கிம் மாநிலம், பாக்யோங்கில் கட்டப்பட்டுள்ள புதிய கிரின்பீல்ட் விமான நிலையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.


சீன எல்லை அருகே சிக்கிம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரின்பீல்ட் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் வகையில், விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சீன எல்லையில் இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்று நம்பப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்திலேயே முதன்முதலாக பாக்யோங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிரின்பீல்ட் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, அந்த விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பாக்யோங்கில் திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தையும் சேர்த்து, நாட்டில் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளன. சாதாரண காலணிகளை அணிந்திருக்கும் நபர்களும், விமான நிலையத்தில் பயணிக்கும் நிலையை உருவாக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு வரையிலும் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நாங்கள் 35 விமான நிலையங்களைபுதிதாக கட்டியுள்ளோம். இதற்கு முன்பு ஆண்டுக்கு சராசரியாக ஒரு விமான நிலையம் மட்டுமே கட்டப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 9ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், நமது நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், ஒரேயாண்டில் மட்டும் தற்போது பல்வேறு விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
உடான் திட்டத்தின்கீழ் விமான பயணிகளுக்கான கட்டணம் ரூ.2,500க்கும் குறைவாக இருக்கின்றன. இதனால் சமூகத்தில் அனைத்து பிரிவு மக்களாலும் விமான நிலையங்களை பயன்படுத்த முடியும்.
வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியாவின் வளர்ச்சி தொடர்பான கதையின் என்ஜினாக உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு, முதன்முறையாக வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் வான் மற்றும் ரயில் தொடர்புகளை அதிகரிப்பதற்கும், அப்பகுதிகளில் மின்சார வசதியை செய்து கொடுப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதியை செய்து தருவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் தற்போதுதான் முதன்முறையாக, மின்சார வசதி, நெடுஞ்சாலை பணிகள், உள்கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவதற்கு வடகிழக்கு பிராந்தியத்துக்கு நான் பலமுறை வந்துள்ளேன். இதேபோல், மத்திய அமைச்சர்களும் பலமுறை வந்துள்ளனர்.
பாக்யோங்கில் இருக்கும் கிரின்பீல்ட் விமான நிலையத்தால் சிக்கிமில் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், சுற்றுலா மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் விமான நிலையம் செயல்படத் தொடங்கியதும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இதனால் இப்பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் இங்கு உருவாகும். பாக்யோங்கில் இருந்து கொல்கத்தா, குவாஹாட்டி ஆகிய இடங்களுக்கு விமானங்கள் விடப்படும். இதனால் பாக்யோங் பகுதிக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படும். மலைப்பகுதியால் சூழப்பட்டுள்ள சிக்கிம் மாநிலம், போக்குவரத்து ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்தால், இனி போக்குவரத்துக்கான நேரம் மிச்சப்படும். சிக்கிம் மாநிலத்தை ரயில் மூலம் இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் பாக்யோங் உள்ளது. இங்கு 201 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் ரூ.605 கோடி செலவில் புதிய கிரின்பீல்ட் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்திலும், பாக்யோங் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலும் இருக்கும் மலைப்பகுதியில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டப்பட்டது.
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையம் உள்ளது. இதனால் பாக்யோங் விமான நிலையத்தை அவசர காலங்களில் இந்தியாவால் பயன்படுத்த முடியும். இதற்கேற்ப போர் விமானங்களை தரையிறக்கும் வகையிலும் பாக்யோங் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com