பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தாலும் அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது

பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தாலும் அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது

இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத்


இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள அவர், வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேச்சு நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முதலில் ஏற்ற இந்தியா, பின்னர் அதனை ஒரே நாளில் ரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 
இதற்கு பதிலளித்த குரேஷி, பேச்சு நடத்த வேண்டும் என்று இந்த மாதத்தில்தான் பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், ஜூலை மாதம் நடந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கலாம். 
ஆனால், நாங்கள் அதற்கான வாய்ப்புகளை முழுவதுமாக மறுக்க மாட்டோம். அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது.
இந்தியா, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வது காஷ்மீரில் நல்ல சூழ்நிலையை உருவாக்காது. 
சந்திப்புகளும், பேச்சுவார்த்தைகளும்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ராஜ்ஜியரீதியில் முறைப்படிதான் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் தரப்பு கடிதம் எழுதியது. 
ஆனால், இந்தியத் தரப்பு அணுகுமுறைதான் சரியில்லை. ஏனெனில், அவர்கள் முதலில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு பின்னர் அதனை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டனர். முக்கியமாக, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சும், அவர் பேசிய முறையும் ஒரு வெளியுறவு அமைச்சருக்குரியதாக இல்லை என்றார்.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, இங்கு போர் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசியது இல்லை. அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லுறவு, மக்களின் மேம்பாடு ஆகியவற்றையே பாகிஸ்தான் விரும்புகிறது. 
ஆனால், இந்தியத் தரப்பில் இருந்துதான் இதற்கு மறுப்பு எழுகிறது. யாராவது எங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் அதனை நாங்கள் எதிர்ப்போம். நாங்கள் எப்போதும் யாரிடமும் மோசமான போக்கை முன்னெடுக்க மாட்டோம் என்றார்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் அஞ்சல் தலை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. 
இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூர் குருத்வாராவில் வழிபாடு நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் பாகிஸ்தான் செய்து கொடுத்தது என்பதை மறந்துவிடக் கூடாது என்று குரேஷி பதிலளித்தார்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் கடந்த வியாழக்கிழமை விடுத்த கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. 
அதன்படி, இந்த வாரம் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்தூம் மஹ்முத் குரேஷியும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும், இந்திய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியை புகழும் வகையில் பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டதை அடுத்து பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com