அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க சட்டம்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க சட்டம்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்


அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது பெரிய எழுத்துகளில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது குறித்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரியும், பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மற்றும் பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலில் குற்றவாளிகள் அதிகரிப்பு: இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை தனது தீர்ப்பினை வழங்கியது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரும் அடங்குவர். அந்தத் தீர்ப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது:
ஊழல்வாதிகளாலும், கிரிமினல் குற்றவாளிகளாலும் இந்திய அரசியலின் ஆணிவேர் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில், கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களாட்சியின் மாண்பை குலைக்கும். 
குற்றங்களுக்கு காரணம்: அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவது என்பது ஒன்றும் புதிதல்ல. முக்கியமாக கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் பல்வேறு குற்றவியல் கும்பல்களுக்கும், காவல் துறையினருக்கும், சுங்க அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட என்.என். வோரா தலைமையிலான குழுவின் அறிக்கையில், பணபலமே அனைத்து விதமான குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
மக்களின் எதிர்பார்ப்பு: அரசியல்வாதிகள் ஊழல்களில் ஈடுபடுவதை, மக்கள் அமைதியாக, அதனைத் தடுப்பதற்கு உதவிகளின்றி, வெறும் பார்வையாளராக இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நேர்மையான சட்டங்கள் மூலம் நாடு ஆட்சி செய்யப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடுமையான சட்டம்: கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர், நாட்டு மக்களுக்கான சட்டங்களை இயற்றுவது மிகப்பெரிய நகைமுரணாக உள்ளது. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தகுதி நீக்கம் செய்வது குறித்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது குறித்தும் இறுதி முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்கே முழு அதிகாரம் வழங்குகிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும். அதனையே மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர். 
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே உச்ச நீதிமன்றத்தின் வேலை. சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் வேலை. சட்டம் இயற்றுவது குறித்து நாடாளுமன்றத்துக்கு 
அறி வுரைகளை மட்டுமே உச்ச நீதிமன்றம் வழங்க முடியும். 
குற்ற வழக்குகளை தெரிவிக்க வேண்டும்: தேர்தலில் போட்டியிடும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அறிந்து கொள்ள, மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது பெரிய எழுத்துகளில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்: மேலும், அரசியல் கட்சிகளும் தங்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அனைத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தங்களது வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், கட்சியின் இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அனைத்துக் கட்சிகளின் கடமையாகும். மேலும், பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் தங்களின் வேட்பாளர்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த கட்சிகள் முயற்சிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், கட்சிகள் தங்களுக்குள் நேர்மையான கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
குற்றம் சாட்டப்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கும் வகையிலும், நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு ஆளாகும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வாதம்: முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றபோது, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களில் நீதித்துறை தன்னாட்சியாக முடிவெடுக்கக் கூடாது. கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவது என்பது தேர்தலில் போட்டியிடுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும். குற்றம் சாட்டப்பட்டோருக்கும், குற்றவாளிக்கும் இடையே நாடாளுமன்றம் ஏற்கெனவே வேறுபாட்டை வகுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணைய வாதம்: மத்திய அரசின் வாதத்துக்கு தேர்தல் ஆணையம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், அரசியலில் கிரிமினல்களின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கடந்த 1997, 1998ஆம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திடம் சட்டம் நிறைவேற்றும்படி கூறாமல், உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com