லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பிரியாணி வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நசிமுதீன் சித்திக்கை ஆதரித்து சனியன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ததேதா கிராமத்தில் உள்ள சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்த அப்பகுதி எம்எல்ஏ மவுலானா ஜமீல் வீட்டில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு பங்கேற்ற தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் யாருக்கு முதலில் பிரியாணி வழங்குவது என்பதில் ஏற்பட்ட குழப்பம் மோதலாக வெடித்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். எம்எல்ஏ ஜமீல் மற்றும் மகன் நயீம் அகமது உள்ளிட்ட 34 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்குவதற்கு உரிய முன் அனுமதி பெறப்படவில்லை. எனவே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் விதிமீறல் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர்.