ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் வாட்டர்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.