புது தில்லி: வடமேற்கு தில்லி தொகுதி பாஜக எம்பியான உதித் ராஜுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் கட்சியில் இணைந்துள்ளார்.
இவர் போட்டியிட்டு வென்ற வடமேற்கு தொகுதியில் பஞ்சாபி சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தலித் பாதுகாப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிய உத்தரவுக்கு எதிராக தான் போராடிய காரணத்தால்தான், தனக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை என்று அவர் நேற்று தெரிவித்திருந்தார்.
இதுபோல சபரிமலை உள்ளிட்ட சில விவகாரங்களிலும், கட்சியின் கொள்கைகளுக்கு இவர் முரண்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.