திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமானது கோவிந்தராஜ சுவாமி கோயில். இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தியை அலங்கரிக்கும் 3 தங்கக் கிரீடங்கள் மாயமானது கோயில் அர்ச்சகர்கள் மூலம் சனிக்கிழமை இரவு தெரிய வந்தது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு மீண்டும் வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது பக்தர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.