புது தில்லி: இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக, கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவின் காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின் மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியர் ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகரான ராஜீவ் சக்சேனா கடந்த 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவின் காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜீவ் சக்சேனாவை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.