சக டாக்டர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தில்லியில் பெண் டாக்டர் பூனம் வோஹா(52) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியில் உள்ள பிரபல ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் பூனம் வோரா. இவர் பாபா காரக் சிங் மார்க் பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், டாக்டர் பூனம் வோரா நேற்று தனது வீட்டின் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், கதவு திறக்கப்படவில்லை. டாக்டர் பூனம் வோராவின் செல்போனை தொடர்புகொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து விரைந்து வந்த போலீஸார் கதவை திறந்து பார்த்தபோது, டாக்டர் பூனம் வோரா மின் விசிறியில் தூக்கு போட்டு சடலமாக தொங்கினார். போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பாக, டாக்டர் பூனம் வோரா எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், தன்னுடன் பணியாற்றிய 3 டாக்டர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பூனம் வோராவின் செல்போனையும் கைப்பற்றிய போலீஸார், அதில் உள்ள அழைப்புகள் மற்றும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.