கொல்கத்தா: பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் உலக முதலீட்டாளர் மாநாடு வியாழனன்று தொடங்கி வெள்ளி மாலை நிறைவு பெற்றது. மாநாடு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
பிரதமர் மோடி கோத்ரா மற்றும் பிற மோதல் சம்பவங்களின் வழியாக வந்தவர். தேர்தலுக்கு முன்பு அவரை 'சாய்வாலா' ன அழைத்தோம். ஆனால் தற்போது தேர்தலுக்கு பிறகு அவர் 'ரஃபேல் வாலா' என அழைக்கப்பட உள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அதை வெளிக்கொணரும் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.மோடி ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். இவ்வாறு அவர் மொத்தமாக 'ஊழல்களின் மாஸ்டராக' விளங்குகிறார்.
பணத்தின் துணைகொண்டு மோடி பிரதமர் ஆனதென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால் எனக்கு எப்போதும் பயம் கிடையாது. எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். அதன்பொருட்டு என்னுடைய பாதையில் போராடுகிறேன்.
நாங்கள் பிரதமர் நாற்காலி என்னும் பதவியைதான் மதிக்கிறோம்; மோடியை அல்ல.
இவ்வாறு அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.