தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது வெள்ளியன்று மர்ம நபர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு, பாஜகவினர்தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது.
தில்லி முதல்வரான அவிந்த் கேஜரிவால் வெள்ளியன்று நரில்லா பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவரது கார் செல்லும் வழியில் 100-க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் குழுமியிருந்தனர். அவர்கள் முதல்வரை சந்திக்க விரும்பி அதற்கு முயன்றனர்.
ஆனால் அவரது கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கையிலிருந்த தடிகளால்,முதல்வர் காரை தாக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கார் மீதான தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் அலுவலக தரப்பு தெரிவிக்கிறது.
அதேசமயம் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசில்புகார் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இதன் பின்னணியில் பாஜக தொண்டர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.