அகர்தலா: திரிபுராவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்வு மேடையில், சக பெண் அமைச்சரிடம் மாநில பாஜக அமைச்சர் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் ஆகியோர் கலந்துகொண்ட நலத்திட்ட விழா ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் கண்டே , கல்வெட்டு திறக்கப்படும் சமயத்தில் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக் மாவின் இடுப்பில் கை வைக்கிறார். இதையுணணர்ந்த சந்தனா அமைச்சர் மனோஜின் கையைத் தட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சைக்குளானது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோஜ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், திரிபுரா எதிர்க்கட்சிகள் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆனால் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக திரிபுரா மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடியோ ஓன்று தற்போது வெளியாகி, இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.