ஸ்ரீநகர்: வியாழனன்று நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரரின் உடலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய சம்பவம் நிகழ்ந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர் மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர்.
வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு காஷ்மீரில் வெள்ளியன்று இறுதி மரியாதை செய்யப்பட்டது. காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், ஒரு ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார்.
வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து, பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.