மேற்கு வங்கத்தில், முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய சாரதா நிதி நிறுவனம், ரோஸ் வேலி ஆகிய நிறுவனங்களின் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக ராஜீவ் குமாருக்கு எதிராகப் புகார் எழுந்தது.
அது தொடர்பாக ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முற்பட்டது. ஆனால், அவர் அதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில், சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. அப்போது, ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சிபிஐ முன் ஆஜரான ராஜீவ் குமாரிடம் விசாரணை நடைபெற்றது. சிபிஐ மூத்த அதிகாரிகள் சுமார் 12 பேர் அடங்கிய குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை எதிர்கொள்வது தொடர்பான பணிகளுக்காக கொல்கத்தா திரும்ப வேண்டும் என்று ராஜீவ் குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதியளித்தனர்.
இந்நிலையில், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு புதிய போலீஸ் கமிஷனராக அனுஜ் ஷர்மா, செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவியில் இருந்த ராஜீவ் குமார் மேற்குவங்கத்தின் குற்ற விசாரணைத் துறையின் ஏடிஜி மற்றும் ஐஜிபி-யாக மாற்றப்பட்டார்.