புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பயின்று வரும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"காஷ்மீர் மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது. புல்வாமா தாக்குதலால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். ஆனால், அதன் தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக ஒரு காஷ்மீர் மாணவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகவில்லை" என்றார்.
முன்னதாக, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரை வழங்கியிருந்தது. அதில், காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது.