புதுதில்லி: இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது சர்வதேச ஒலிம்பிக் குழு.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றதையடுத்து, பதில் நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
புல்வாமா தாக்குதலை அடுத்து, தில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியா உடனான அனைத்து கலந்துரையாடல்களையும் ரத்து செய்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தவும் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை தடை விலக்கிக் கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.