ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் தில்லியில் அண்மையில் உண்ணாவிரதமும் இருந்தார்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். சுமார் 12 கி.மீ., நடைபயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை அவர் தரிசனம் செய்கிறார்.
ராகுல் காந்தியுடன், அவரது சகோதரி பிரியங்காவின் மகன் ரேகன் வதேரா, காங்கிரஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் செல்கின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு மாலை திருப்பதியில் உள்ள வேங்கடேஸ்வரா மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
இதனிடையே ராகுல் காந்தி வருகையையொட்டி திருப்பதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.