தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வருவதன் காரணமாக, 2017-18 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதமே நடப்பு 2018-19-ஆம் ஆண்டிலும் தொடர அதிக வாய்ப்புள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதமாகவே மீண்டும் தொடரும். அதேசமயம், இந்த வட்டி விகிதத்திற்குமேல் அதிகரிக்கப்பட முற்றிலும் வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.65 சதவீத வட்டி வழங்குவதற்கு ஓய்வூதிய அமைப்பான இபிஎஃப்ஓ-வின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்துள்ளதை அடுத்து, தொழிலாளர் நடப்பு நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017-18-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த 8.55 சதவீத வட்டி, தற்போது 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும் கடந்தாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் அவர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 0.10 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். இதனால், 6 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி விகிதம் கடந்த 2012-13-இல் 8.5 சதவீதமாகவும், 2013-14 மற்றும் 2014-2015-இல் தலா 8.75 சதவீதமாகவும், 2015-16-இல் 8.8 சதவீதமாகவும், 2016-17-இல் 8.55 சதவீதமாகவும் இருந்தது. நடப்பாண்டில் 8.65 சதவீதமாகவும் உள்ளது.
இபிஎஃப்ஓ அமைப்பு கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதுவரையில் ரூ.50,000 கோடியை ஈடிஎஃப் திட்டங்களில் அந்த அமைப்பு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.