மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் வெடிபொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேருந்தில் இருக்கைக்கு அடியில் சந்தேகத்துக்கு கிடமான வகையில் ஒரு பை இருந்ததை நடத்துநர் கண்டார். இதுதொடர்பாக போலீஸாருக்கும் அவர் தகவல் அளித்தார். வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
பணம் பெற்றுக் கொண்டு நடத்துநரும், ஓட்டுநரும் அந்தப் பையை வாங்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவ்டே கூறுகையில், ஓட்டுநர், நடத்துநர் மீது சந்தேகம் இருப்பதால் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்றார்.