ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா, மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
மைனே பியார் கியா, ஹம் ஆப்கே ஹைன் கெளன் உள்ளிட்ட குடும்ப படங்களை தயாரித்ததன் மூலமாக பிரபலமடைந்தவர் ராஜ்குமார் பர்ஜாத்யா. அவருக்கு சுதா என்ற மனைவியும், சூரஜ் பர்ஜாத்யா என்ற மகனும் உள்ளனர். சூரஜும் தயாரிப்பாளர் ஆவார்.
இதுகுறித்து ராஜ்ஸ்ரீ புரோடக்ஷன்ஸ் சார்பில் சுட்டுரையில் வெளியிடப்பட்ட பதிவில், சூரஜ் பர்ஜாத்யாவின் தந்தை ராஜ்குமார் பர்ஜாத்யா காலமானார். அவரது இழப்பால் ஏற்பட்ட துக்கத்தை அனுசரித்து வருகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராஜ்குமாருக்கு முதுகு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.