13 ஆயிரம் கிராமங்களின் மண் உடன் ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய படுகொலைச் சம்பவங்களில் ஒன்றாக ஜாலியன்வாலாபாக் திகழ்கிறது. கடந்த 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பூங்கா ஒன்றில் சீக்கிய புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது பிரிட்டிஷ் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த கூட்டப்படுகொலை சம்பவத்தில் 379 பேர் உயிரிழந்ததுடன், 1,200 பேர் படுகாயமடைந்ததாக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுச் சின்னம் அமைக்க பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முடிவெடுத்துள்ளார். நினைவுச் சின்னம் அமைக்கும் இடம், ஏப்ரல் 13, 2019-ல் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட முன்னேற்பாடுகளை பஞ்சாப் அமைச்சர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 ஆயிரம் கிராமங்களில் இருந்தும் மண் எடுத்துவரப்பட்டு அமைக்கப்படும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.