தில்லி புறநகர் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பவானா பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நீரஜ் பவானா கும்பலின் நடமாட்டத்தை, காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அக்கும்பல் தொடர்பாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன. கைதான 8 பேரும், நீரஜ் பவானாவின் நெருங்கிய கூட்டாளியான ராகுல் என்பவருக்காக வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும், தனது உறவினரான வீரேந்தர் என்பவரிடமிருந்து ஆயுதங்களை ராகுல் வாங்குவார் என்ற விவரமும் தெரியவந்தது.
இதையடுத்து, சுல்தான்பூர் தேபாஸ் கிராமத்திலுள்ள வீரேந்தரின் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 5 நாட்டுத் துப்பாக்கிகளும், 165 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. வீரேந்தர், ராகுலின் மனைவி நிர்மலா, மற்றொரு உறவினப் பெண் கீர்த்தி என 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.