மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று திடீரென அமெரிக்கா சென்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.கவின், மூத்த தலைவருமான, அருண் ஜேட்லிக்கு கடந்த வருடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.