அந்தமான் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்ததாவது: காலை 8.43 மணியளவில் இந்த நிலநடுக்கம் நிகோபர் தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (இன்காய்ஸ்) இயக்குநர் எஸ்பிஎஸ்.ஷெனாய் கூறுகையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் மட்டத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இன்காய்ஸ் நிறுவனம் நிலநடுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாகும் சுனாமி குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு சுனாமி எச்சரிக்கை விடும் அமைப்பாகும். இந்தியா மட்டுமின்றி சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அண்டைய நாடுகளுக்கும் சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய அமைப்பாகவும் திகழ்கிறது.